கீரையில் உள்ள சத்துக்கள்


கீரையில் உள்ளது நிறைவான சத்து

கீரைகளைச் சாப்பிடுவதை தாழ்வாகக் கருதும் நிலை மாற வேண்டும். தினசரி உணவில் கீரைகள் முக்கிய அங்கம் வகிக்க வேண்டும். கீரைகள் விலை மலிவாக இருப்பதால் அவைகளில் சத்து இல்லை என்றோ, அதிக விலை கொடுத்து வாங்கும் பழங்களில்தான் சத்து என்றோ நினைத்துவிடக் கூடாது. உதாரணமாக நமக்கு எளிதில் கிடைக்கும் ஒரு கிலோ முளைக் கீரையில் உள்ள A வைட்டமின் சத்தைப் பெறுவதற்குச் சுமார் 70 கிலோ வாழைப்பழம் சாப்பிட வேண்டும். ஒரு கிலோ அகத்திக் கீரையில் உள்ள சுண்ணாம்புச் சத்தைப் பெற வேண்டுமானால் 113 கிலோ ஆப்பிள் சாப்பிட வேண்டும். ஒரு கிலோ அரைக் கீரையிலுள்ள இரும்புச்சத்தைப் பெறுவதற்கு 12 கிலோ அன்னாசிப் பழம் சாப்பிட வேண்டும். இந்த அளவுக்கு பழங்களை விட கீரையில் சத்துக்கள் நிறைவாய் உள்ளன. இதனால் நம் தினசரி உணவில் கீரையை கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும்




முருங்கைக் கீரையில் கால்ஷியம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, சி, பீட்டா கரோட்டின் ஆகியவை நிறைந்துள்ளன. கண்ணுக்கு மிகவும் நல்லது. மலச் சிக்கலைத் தீர்க்கும். பொட்டாஷியம், தாமிரம், மெக்னீஷியம், குரோமியம், துத்தநாகம், குளோரைடு ஆகிய தாது உப்புகள் இந்த கீரையில் ஓரளவுக்கு இருப்பதால் உடலுக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும். எலும்பு உறுதி பெறும்.

முருங்கைக் கீரையில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதனால், அதை உணவாக உட்கொள்ளும்போது, சொறி சிரங்கு நோய்கள், பித்தமயக்கம், கண்நோய், செரியா மாந்தம், கபம் முதலியவை குணமாகின்றன... வைட்டமின் ஏ மிகுந்திருப்பதால் கண்ணுக்கு ஒளியூட்டக்கூடியது முருங்கைக்கீரை...



 பொன்னாங்கன்னி

வைட்டமின் சி மற்றும் இரும்புச் சத்து ஓரளவு உள்ளது. கால்சியம், நார்ச்சத்து, பீட்டா கரோட்டின் மற்றும் ரிபோ ப்ளோமின் நிறைந்துள்ளன. மெக்னீஷியம், தாமிரம், மாங்கனீஸ், கந்தகம் ஆகியவை ஓரளவுக்கு உள்ளன. கண்களுக்கு மிகவும் நல்லது. புரதம் ஓரளவுக்கு உள்ளது. வாரம் ஒரு முறை கூட்டு செய்து சாப்பிடலாம்.


 
வெந்தயக்கீரை

உடலுக்கு குளிர்ச்சித் தரக்கூடியது வெந்தயக் கீரை. வெந்தயக்கீரையானது வெந்தயத்திற்கான அனைத்து நற்குணங்களையும் தன்னகத்தே கொண்டது. சிறுநீர்ப் பெருக்கியாகவும், மலமிளக்கியாகவும் மூப்படைந்த தசைகளை இறுக்கி இளமையை காத்திடக்கூடிய ஓர் உன்னத மூலிகையாகத் திகழ்கிறது. மேலும் வெந்தயக்கீரை வயிற்றுப்பொருமலை தவிர்க்கக் கூடியது. ஜூரத்தை குறைக்கக் கூடியது. இருமல், சளி போன்ற கப கோளாறுகளை சீராக்கக் கூடியது. ஜீரண சக்தியை தூண்டக் கூடியது. வயிற்றுப்போக்கை தவிர்க்கக் கூடியது. நரம்புகளுக்கு வலுவூட்டக் கூடியது. நீரிழிவு நோயை கட்டுப்படுத்தக் கூடியது மற்றும் வயதிற்கு முந்திய முதிர்ச்சியையும் முடி உதிர்வதையும் தவிர்க்கக் கூடியது.

எல்லோருக்கும் ஏற்ற இந்தக் கீரையில் பீட்டா கரோட்டின் மிகுதியாக உள்ளது. இரும்பு, நார்ச்சத்துக்கள் ஓரளவுக்கு இருக்கின்றன. வைட்டமின் பி காம்ப்ளக்சும் நிறைந்து காணப்படுகிறது. தாது உப்புக்களில் பொட்டாஷியம், தாமிரம், மாங்கனீசு, துத்தநாகம், சல்பேட், குளோரைடு ஆகியவை ஓரளவுக்கு உள்ளன.


 


முளைக் கீரை

முளைக்கீரையில் 85.7 சதவீதம் நீரும், 4 சதவீதம் புரதச்சத்தும், 0.5 சதவீதம் கொழுப்புச் சத்தும், 2.7 சதவீதம் தாதுப்புக்களும், ஒரு சதவீதம் நார்ச் சத்தும், 6.3 சதவீதம் மாவுச் சத்தும் உள்ளன.

100 கிராம் கீரையில் 397 மில்லி கிராம் கால்சியமும், 247 மில்லி கிராம் மெக்னிசியமும், 772 மில்லி கிராம் ஆக்ஸாலிக் அமிலமும், 83 மில்லி கிராம் மணிச்சத்தும், 25.5 மில்லி கிராம் இரும்புச் சத்தும், 230 மில்லி கிராம் சோடியமும், 341 மில்லி கிராம் பொட்டாசியமும், 0.33 மில்லி கிராம் தாமிரச் சத்தும், 61 மில்லி கிராம் கந்தகச் சத்தும் உள்ளன.

இதனை நாள்தோறும் உணவுடன் சேர்த்துக்கொள்வதால் ஒரு பூரண உணவுக்கு தேவையான எல்லாச் சத்துக்களையும் கொடுக்கக் கூடியது. இந்தக் கீரையில் அடங்கியுள்ள இரும்பு மற்றும் தாமிரச் சத்துக்கள் ரத்தத்தைச் சுத்திகரிப்பு செய்து, உடலுக்கு அழகும் மெருகும் ஊட்டவல்லன. மற்றும் இதிலடங்கியுள்ள மணிச்சத்து மூளை வளர்ச்சிக்கு ஏற்ற உணவுச் சத்தாகும். நல்ல மலமிளக்கியாகவும் இது விளங்குகிறது. மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்தக் கீரையைத் தொடர்ந்து பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.


சிறுநீரகப் பிரச்னை, அலர்ஜி உள்ளவர்கள் இந்த கீரையைத் தவிர்க்க வேண்டும்.
 

கறிவேப்பிலை

கறிவேப்பிலை செரிமானத்திற்கு மிகவும் உதவும். இளநரையை தடுக்கும். சர்க்கரை வியாதியையும் கட்டு படுத்த வல்லது. தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கும்.

மலச்சிக்கலை தவிர்த்து, தேவையான பசியைத் தூண்டும் வேலையையும் கறிவேப்பிலை செய்கிறது. கறிவேப்பிலை இலையை அரைத்து காய வைத்த பின், தேங்காய் எண்ணெய் அல்லது தலைமுடிக்கு உபயோகிக்கும் எண்ணெயில் போட்டு சில நாட்கள் ஊற வைத்து, அந்த எண்ணெயைத் தேய்த்து வர, நரை முடி நம்மை நெருங்காது. மேலும் முடி உதிர்தலையும் இந்த எண்ணெய் தடுத்து நிறுத்தும். பித்தத்தைத் தணித்து உடல் சூட்டை ஆற்றும்.

கறிவேப்பிலைச் சாறு ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களைப் பலப்படுத்துகிறது. பத்திய உணவு சாப்பிடுபவர்கள் கறிவேப்பிலைத் துவையலை சேர்த்துக்கொள்வது நல்லது. கண் ஒளி குன்றாமல், நரை திரை இல்லாமல் என்றும் இளமைப் பொலிவுடன் வாழ கறிவேப்பிலை அருமருந்தாக உதவுகிறது.


 
வெற்றிலையின் பலன்கள்

குழந்தைகள் சரியாகப் பால் குடிக்காத நிலையில், பிரசவித்தப் பெண்களுக்கு மார்பில் பால் கட்டிக்கொண்டு வீக்கமும் வலியும் இருக்கும். வெற்றிலையைத் தணலில் வாட்டி மார்பில் வைத்துக் கட்டிவர வீக்கமும் வலியும் குறையும். அதே சமயம், வெற்றிலையை ஆமணக்கு எண்ணெய் தடவி வாட்டி, மார்பில் வைத்துக் கட்டினால் அதிக பால் சுரக்கும்.

சிறு குழந்தைகளுக்குப் பால் மற்றும் பால் பொருட்களால் செரியாமை ஏற்படும். பத்து வெற்றிலைக் காம்பு, ஒரு வசம்பு, கால் டீஸ்பூன் சீரகம், கால் டீஸ்பூன் ஓமம், இரண்டு பூண்டு பல், இரண்டு கிராம்பு ஆகியவற்றை மண் சட்டியில் கருக வறுத்து, ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு பாலாடை ஆகும் அளவுக்கு சுண்டக் காய்ச்சவும். இதனுடன் தேன் அல்லது நாட்டுச் சர்க்கரை கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க, செரியாமை நீங்கும்.

பத்து வெற்றிலைகளைச் சிறிதாக நறுக்கி, ஒரு டீஸ்பூன் பொடித்த மிளகு சேர்த்து இரண்டு டம்ளர் தண்ணீர்விட்டு அரை டம்ளர் அளவுக்கு சுண்டக் காய்ச்சி இரண்டு அல்லது மூன்று முறை குடித்துவர உணவினால் ஏற்படும் நச்சுத்தன்மை நீங்கும்.

வெற்றிலையைத் தணலில் வாட்டிச் சாறு பிழிந்து அதனுடன் சம அளவு இஞ்சிச் சாறு கலந்து தினமும் குடித்துவர நாள்பட்ட நுரையீரல் நோய்கள் குணமாகும்.

அரை டம்ளர் தேங்காய் எண்ணெயில் ஐந்து வெற்றிலைகளைப் போட்டுக் கொதிக்கவிட்டு, வெற்றிலை நன்றாகச் சிவந்ததும் எண்ணெயை வடிகட்டி பாட்டிலில் பத்திரப்படுத்தி, சொரி, சிரங்கு, படைகளின் மீது தடவிவர நல்ல பலன் கிடைக்கும்.

இரவில் படுக்கப்போகும்போது வெற்றிலையில் சிறிதளவு ஆமணக்கு எண்ணெய் தடவி, தணலில் காட்டி கட்டிகளின்மீது வைத்துக் கட்டினால், கட்டி உடைந்து சீழ் வெளிவரும்.

வெற்றிலைச் சாறுடன் சிறிது தண்ணீர் மற்றும் பாலைச் சேர்த்து அருந்திவர, சிறுநீர் நன்றாகப் பிரியும்.

கம்மாறு வெற்றிலைச் சாறுடன் வெந்நீர் கலந்து கொடுக்க வயிறு உப்புசம், மந்தம், தலைவலி, வயிற்றுவலி குணமாகும்.

சிறிது வெற்றிலைச் சாறுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து தினமும் அருந்திவர, நரம்புகள் பலப்படும்.


 



வேப்பங்கொழுந்து துவையல் செய்யலாம்...

மறந்து போன மருத்துவ உணவு

தேவையானவை
வேப்பங்கொழுந்து 30 இனுக்கு, வெல்லம் 10 கிராம், பச்சை மிளகாய் 2, பூண்டு 2 பல், எண்ணெய், புளி, உப்பு, மஞ்சள் தூள் ஆகியவை தேவையான அளவு.

செய்முறை
சிறிதளவு எண்ணெயில் வேப்பங்கொழுந்து, உளுத்தம்பருப்பு, பூண்டை வறுத்து, வெல்லம், பச்சை மிளகாய், புளி, உப்பு , மஞ்சள்தூள் சேர்த்து துவையளாக அரைக்கவும்.

மருத்துவ பயன்கள்
சர்க்கரை நேயாளிகளுக்கு ஏற்ற துவையல் இது. பித்தம் தணியும். வயிற்றில் உள்ள கிருமிகள் ஒழியும். நேயர் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

You May Also Like

0 comments