சாப்பிட்டதுக்கு அப்புறம் வயிறு வலிக்குதா?

Referred URL
http://tamil.gizbot.com/mobile/top-10-diwali-special-offers-for-buying-best-smartphones-online-2/2

stomach pain after eating means
உண்ணும் உணவு அளவுக்கு அதிகமான சுவையுடன் இருந்தாலும் சரி, அதிக பசியுடன் இருந்தாலும் சரி, அப்போது உண்ணும் உணவின் அளவே தெரியாது. அவ்வாறு அளவுக்கு அதிகமாக சாப்பிட்டப் பிறகு, உடல் அதிக சோர்வுடன் அல்லது எதுவுமே செய்ய முடியாத நிலையில் இருப்போம். இது எப்போதும் நடக்கும் செயல் தான். ஆனால் நம் வயிற்றின் அளவை மீறி சாப்பிடும் போது, அந்த உணவு செரிமானமடைய நிறைய நேரம் எடுத்துக் கொள்கிறது. மேலும் உடலில் உள்ள அனைத்து எனர்ஜிகளும் அந்த உணவுப் பொருட்களை செரிமானமடையச் செய்யும் வேலையில் ஈடுபடும். ஆகவே தான் உடலில் அதிக சோர்வும், தூக்கமும் வருகிறது.

ஆனால் சிலருக்கு சாப்பிட்டப் பிறகு, கடுமையான வயிற்று வலி ஏற்படும். அதிலும் அடிவயிற்றில் வலி ஏற்பட்டு, உட்காரவே முடியாத நிலையில் இருக்கும். அவ்வாறு அடிவயிற்றில் அதிக அளவில் வலி ஏற்பட்டால், அதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. அதாவது வாயு மற்றும் செரிமானமின்மை என்பன.

வயிறு வலிக்கும் போது வலதுபுறத்தில் வலி ஏற்பட்டால், சிறுநீரகத்தில் கல், அப்பென்டிக்ஸ் அல்லது அல்சர் போன்றவற்றில் ஏதேனும் ஒன்று இருக்கிறது என்று அர்த்தம். அதுவே இடதுபுறத்தில் வலி ஏற்பட்டால், குடலில் புண் (அதிக வலி இருந்தால் குடல் புற்றுநோய்), குழாய்களில் ஏதேனும் சதை வளர்ச்சி, வயிற்றுப் போக்கு அல்லது மலச்சிக்கல் என்பதற்கான அறிகுறி.

சாப்பிட்டப் பின் அடிவயிற்றில் எதற்கு வலி ஏற்படுகிறது?
குடலியக்கத்தில் எரிச்சல்: உடலில் குடலியக்கம் சரியாக இயங்கவில்லை என்றால், உண்ட பின்பு வயிற்றில் வலி ஏற்படும். எப்போது குடலியக்கம் சரியாக இயங்கவில்லையோ, அப்போது பெருங்குடலில் பெரும் வலியை உண்டாக்கும்.

மலச்சிக்கல்: மலச்சிக்கலும் வயிற்று வலியை உண்டாக்கும். அதிலும் எப்போது குடலின் இயக்கம் சரியாக இயங்காமல், மிகவும் வலுவற்று இருக்கிறதோ, அப்போது அடிவயிற்றில் கடுமையான வலி ஏற்படும். ஏனெனில், அந்த நேரத்தில் உடலில் இருக்கும் கழிவுகள் வெளியேறாமல், சரியான அழுத்தமின்றி உடலிலேயே தங்கிவிடுகின்றன.

வாயுத்தொல்லை: எப்போது உடலில் வாயு அதிகமாக உள்ளதோ, அப்போது வயிற்றில் ஒரு வித வீக்கம் ஏற்படுவது போல் இருப்பதோடு, வயிற்றில் எரிச்சலை உண்டாக்குவது போல் இருக்கும். இதற்கு உண்மையான காரணம், வயிற்றில் புண் இருக்கிறது என்பதாகும். அதனால் தான் வயிற்றில் வலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படுகிறது.

புண்: காரமான உணவு, செரிமானமின்மை மற்றும் வாயுத்தொல்லை போன்றவை வயிற்றில் புண்களை ஏற்படுத்தி, வலியை உண்டாக்குகின்றன.

அல்சர்: உணவு உண்ட பின்பு வயிற்று வலி ஏற்படுவதற்கு அல்சர் தான் முக்கிய காரணமாக இருக்கும். அல்சர் என்பதும் ஒருவித புண் தான். இந்த அல்சரால் நிறைய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் இந்த அல்சர் வயிறு, மேல் குடல் அல்லது முன்சிறுகுடல் போன்றவற்றில் தான் இருக்கும். வயிற்றில் உள்ள அமிலம் மற்றும் உணவுப் பொருட்கள், அல்சர் உள்ள பகுதியில் படுவதால், வலி ஏற்படுகிறது.

வயிற்று வலி ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
* ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை விட, சிறு சிறு இடைவெளிகளில் உணவுகளை சாப்பிட்டு வந்தால், அளவுக்கு அதிகமாக ஒரே நேரத்தில் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம்.

* உண்ணும் உணவை நன்கு மென்று சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிட்டால், செரிமானம் விரைவில் நடைபெறுவதோடு, உடல் எடையும் குறையும். வேகமாக சாப்பிட்டால், உடலில் உள்ள செயல்பாடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு, வலியை ஏற்படுத்தும்.

ஆகவே சரியான உணவை சரியான அளவில் சாப்பிட்டு, அதிகமான அளவில் தண்ணீரை குடித்து வாருங்கள். இதற்கு மேலும் வலி ஏற்பட்டால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

You May Also Like

0 comments